Wednesday, 28 September 2016

கொசுக்கடிக்கு நிரந்தரத் தீர்வாக ஒன்று வந்துவிட்டது.!!!!




நம் நாட்டைப் பொறுத்தவரை கொசுத் தொல்லையால் அவதிப்படாதவர்கள் குறைவு. பல்வேறு கொசுத் தடுப்பு முறைகளைப் பயன்படுத்தியும் கொசுக்களிடம் இருந்து முழுமையாகச் சுதந்திரம் பெற முடியவில்லையா? கவலைப்படாதீர்கள். கொசுக்கடிக்கு நிரந்தரத் தீர்வாக ஒன்று வந்துவிட்டது.
அது, `லேசர் சுவர்’. இந்தச் சுவர், அதிகச் செலவு வைக்காமலே பெரும் பரப்பளவை கொசுக்களின் தாக்குதலில் இருந்து தற்காக்கும் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.
கொலம்பியா பல்கலைக்கழகத்தின் சபோல்க்ஸ் மார்க்கா அமைப்பினர் இந்த லேசர் சுவரை உருவாக்கியிருக்கின்றனர். இது ஒருவரது வீட்டை கூடாரம் போல மூடியிருக்கும். ஒரு கொசு கூட இந்தக் கவசத்தைத் தாண்டி வீட்டுக்குள் பிரவேசிக்க முடியாது. குடும்பத்தினரின் தூக்கத்தையும் கெடுக்க முடியாது.
நாம் இதுவரை பயன்படுத்தி வரும் எல்லா தடுப்பு முறைகளையும்விட இது சிறப்பானது என்று உறுதியாகக் கூறுகின்றனர் ஆய்வாளர்கள்.
கொசுக்களின் உணர்வுறுப்புகளுக்கு வெளிச்சமானது தொந்தரவாக அமையும், குழப்பும் என்று பல ஆண்டுகளுக்கு முன்பே மார்க்கா கண்டுபிடித்துவிட்டார். தொடர்ந்து மேற்கொண்ட ஆய்வுகளின் விளைவாக மார்க்கா தனது மனைவி சுஸா, சக ஆய்வாளர் இம்ரே பரோட்ஸுடன் இணைந்து, ஒளிச் சுவர் எனப்படும் இந்த லேசர் தடையை உருவாக்கியிருக்கிறார். கொசுக்களைப் பொறுத்தவரை இது இரும்புச் சுவர் என்கிறார்.
“நாங்கள் யதேச்சையாகத்தான் இதைக் கண்டுபிடித்தோம். நடந்தோ, பறந்தோ வரும் கொசுக்கள் இந்தச் சுவரைத் தாண்டாமல் திரும்பிச் சென்றதைக் கண்டோம்” என்று மார்க்கா கூறுகிறார்.
ரொம்பச் செலவு வைக்காமல் அதிகப் பரப்பளவை கொசுக்களிடம் இருந்து காக்கும் இந்தத் தடுப்பு முறை பலரையும் ஆச்சரியத்துக்குள்ளாகியிருக்கிறது. தொடர்ந்து பல கோடி ரூபாய் உதவியுடன் இதுதொடர்பான கூடுதல் ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

பருத்திப்பால்

இது ஒரு இனிப்புச்சுவையான உணவு வகையாகும். தமிழ்நாட்டின் மதுரையில் சாலையோரக்கடை முதல் எல்லா இடங்களிலும் கிடைக்கும். ஜிகர்தண்டா போல பருத்திப்பாலும் மதுரையில் மிகவும் பிரசித்தம் இது பச்சரிசிமாவு, பருத்திவிதை, கருப்பட்டி, ஏலக்காய், சுக்கு, தேங்காய்த் துருவல் ஆகியவற்றைக்கொண்டு தயாரிக்கப்படுகிறது.சங்க இலக்கியத்திலும் பருத்திக் கொட்டையை உணவிற்காகப் பெண்கள் சேகரித்து வைத்துள்ள செய்திபதிவாகியுள்ளது. பருத்திக்கொட்டையிலிருந்து பனைவெல்லம் சேர்த்து தயாரிக்கப்படும் பருத்திப்பால் உடல் அசதிக்கு சிறந்த மருந்தாகும்.

மதுரைப்பக்கம் எப்போது போனாலும் ஒரு கப் பருத்திப்பாலாவது குடித்துவிட்டு வந்தால்தான் ஊருக்குப்போய்விட்டு வந்த திருப்தியே இருக்கும். மதுரையில் இந்த பருத்திப்பாலை ஆயாக்கள் கேன்களில் எடுத்துவந்து ‘’பர்த்தீ பால்’’ என கத்தி கத்தி வீடுவீடாக விற்பதை பார்த்திருக்கிறேன். என்னுடைய உறவினர்களின் வீடுகளுக்கு பள்ளி விடுமுறைக்காக மதுரை செல்லும்போது பருத்திப்பால் விற்கிற பாட்டி வீதிப்பக்கம் வந்தாலே கையில் தூக்குபோசியோடு ஒட்டுமொத்தமாக ஓடுவோம். இரண்டுரூவாக்கு குடுங்க.. அஞ்சுரூவாவுக்கு குடுங்கனு கையை நீட்டினால்.. தன்னுடைய கரண்டியால் தள்ளு என ஒரு அதட்டலோடு கொதிக்க கொதிக்க தூக்குபோசி நிறைய ஊற்றிவிட்டு அதில் கொஞ்சம் தேங்காய் துருவலையும் தூவிகொடுப்பாள் பாட்டி!

இந்த பருத்திப்பாலுக்கு மட்டும் ஒரு விசேஷம் உண்டு. டம்ளரில் ஊற்றிவிட்டால் சூடு குறையவே குறையாது. ஊதி ஊதி பொறுமையாகத்தான் குடித்தாக வேண்டும். சில சமயம் கொதிக்கிற பாலை அவசரப்பட்டு வாயில் ஊற்றி நாக்குவெந்துபோவதும் உண்டு!
சின்ன வயதில் இந்தப் பருத்திப்பால் குறித்த சந்தேகம் நிறையவே வரும். இதை எப்படி தயாரிக்கறாங்க.. பருத்தி என்றதுமே மனசுக்குள்ளே பஞ்சு முளைத்த செடிதான் நினைவுக்கு வரும். ஒருவேளை அந்த பஞ்சை கசக்கிப்போட்டு பால் காய்ச்சுவாங்களோ என்றெல்லாம் நினைத்திருக்கிறேன். ஆனால் இந்த பருத்திப்பால் பருத்தி விதைகளை கொண்டு செய்யப்படுகிறது என்பது பின்னால்தான் தெரியவந்தது.

இந்த பருத்திப்பால் செய்வது பெரிய வித்தையெல்லாம் கிடையாது. எளிமையானதுதான். பருத்தி விதைகளை வாங்கி ஓர் இரவு ஊறவைத்து அதை காலையில் எடுத்து நன்றாக அரைத்து பாலெடுத்துவிடவேண்டும். பிறகு வெல்லமோ கறுப்பட்டியோ ஏதாவது ஒன்றை காய்ச்சி பாகெடுத்து அதில் தண்ணீர் விட்டு நன்றாக கலக்கி வைத்துக்கொள்ளவேண்டும். பருத்திப்பாலை நன்கு காய்ச்சி அதனோடு இந்த பாகையும் விட்டு காய்ச்சிக்கொண்டே, அரிசி மாவு கரைசல் கொஞ்சம் சேர்த்து நன்றாக காய்ந்த பிறகு அடுப்பை விட்டு இறக்கிவிட்டு, சுக்கு ஏலக்காய் தட்டிப்போட்டு கொஞ்சம் தேங்காய்துருவலை மேலாக தூவிவிட்டால் பருத்திப்பால் ரெடி! படிக்கும்போது எளிதாக தெரிந்தாலும் ஒவ்வொன்றிற்கும் குறிப்பிட்ட அளவு இருக்கிறது. அதை சரியாக செய்யவில்லையென்றால் பாயாசம் ஆகிவிடும் அல்லது களிமாதிரி இருகிவிடும்!

இந்த பருத்திவிதைக்கு நெஞ்சுசளியை போக்கும் ஆற்றல் இருக்கிறது என்று ஊரில் சொல்வதை கேட்டிருக்கிறேன். அதோடு மதுரையில் கடைகளிலும் பருத்திப்பால் விற்பதை பார்த்திருக்கிறேன்.

அண்மையில் பெசன்ட் நகர் சென்றிருந்தபோதுதான் வேளாங்கண்ணிமாதா சர்ச் அருகே அந்த கடையை பார்த்தேன். பருத்திப்பாலும் பணியாரமும் மட்டுமே விற்கிற பிரத்யேக கடை. சாதாரண கடைதான். வாசலிலேயே பெரிய பானையில் பருத்திப்பால் வைத்திருக்கிறார். விலையும் குறைவுதான் பத்துரூபாய்! உடனே ஆர்வந்தாங்காமல் ஒரு கப் வாங்கி குடித்துப்பார்த்தேன். மதுரையில் குடித்த பருத்திப்பாலுக்கும் இதற்கும் நிறைய வேறுபாடுகள் இருந்தாலும் இதுவும் ஓக்கே ரகம்தான். மோசமில்லை. பெசன்ட் நகர் பக்கமாக நண்பர்கள் சென்றால் அந்தக்கடைக்கு ஒரு விசிட் அடித்துவிட்டு வரலாம்!

சென்னையில் வேறு எங்கே பருத்திப்பால் கிடைக்கிறதென்று தெரியவில்லை. தெரிந்தால் நண்பர்கள் சொல்லலாம். இன்றும் நல்ல தரமான சுவையான பருத்திப் பால் வடக்கு மாசி வீதி, மேல மாசி வீதி, பழ மார்க்கெட் ஏரியாவில் கிடைக்கிறது. அதிகாலை,மாலை நேரங்களில் தள்ளுவண்டிகளில் விற்கிறார்கள். அடுத்த முறை சென்றால் சுவைக்கவும்.

பருத்திப் பால்ல B காம்ப்ளக்ஸ் சத்து இருக்குங்க. பசி உணர்வை கட்டுப்படுத்தும். நெஞ்சு சளியை குறைக்கும். அதிகமா மூட்டை தூக்கறவங்களுக்கு நெஞ்சில ஒரு வலி வரும் பாருங்க, அந்த நெஞ்சுவலியை கட்டுப்படுத்தும். 25 கிராம் பருத்தி இலையை, 100 மில்லி பசும்பாலில் கலந்து குடித்து வந்தால் வெள்ளைப்படுதல் குறையும்.

செய்முறை 1:-

பருத்திக் கொட்டை - 100 கிராம்
பச்சரிசி - 3 டேபிள்ஸ்பூன்
வெல்லம் - 300 கிராம்
சுக்கு - சிறிது அளவு
தேங்காய் துருவல் - தேவையான அளவு

பருத்திக் கொட்டையை நன்கு ஊறவைத்து மிக்சியில் மீண்டும் மீண்டும் அரைத்து பால் எடுத்துக் கொள்ளவும்.
பச்சரிசியை சிறிது நேரம் ஊறவைத்து மிக்சியில் அரைத்து கொள்ளவும்.
அரைத்த பச்சரிசி மாவை பருத்தி பாலுடன் கலந்து அடுப்பில் ஏற்றி கிளறிக் கொண்டே இருக்கவும்.
பால் கலவை சிறிது கெட்டியாக பொங்கி வரும் போது வெல்லம் கலந்து கிளறிக் கொண்டே இருக்கவும்.
வெல்லம் முழுதும் கரைந்தவுடன் சுக்கு, தேங்காய் துருவல் சேர்த்து கிளறி சிறிது நேரம் கழித்து இறக்கவும்.
சூடான சுவையான பருத்திப் பால் தயார்.

Note: வெறும் வயிற்றில் பருத்திப் பால் அருந்துவது நெஞ்சுசளிக்கு நல்ல மருந்து.

செய்முறை 2:
கருபட்டியுடன் செய்வது

பருத்தி விதை - 2 கைபிடி
கருப்பட்டி - 100 கிராம்
தேங்காய் பால் - அரை மூடி
சுக்கு - அரைவிரளளவு
அரிசி மாவு - 2 ஸ்பூன்
ஏலக்காய் - 2

பருத்தி விதையை முதல் நாள் இரவு தண்ணீரில் ஊறவைக்க வேண்டும். காலையில் ஊறிய விதையை மிக்சியில் சிறிது தண்ணீர் விட்டு அரைத்து பால் எடுக்க வேண்டும்.
கருப்பட்டியை தூளாக்கி ஒரு கப் தண்ணீர் விட்டு காய்ச்சி வடிகட்டி கொள்ளவேண்டும் .ஓரு பாத்திரத்தில் பருத்திவிதை பாலை ஊற்றி காய்ச்ச வேண்டும் .
ஒரு கொதி வந்த உடன் கருப்பட்டி பாலையும் தேங்காய் பாலையும் ஊற்றி காய்ச்ச வேண்டும்.
இந்த கலவை கொதிக்கும் போது அரிசி மாவில் சிறிது தண்ணீர் சேர்த்து கரைத்து அக் கலவையை கொதிக்கும் பருத்தி பாலில் சேர்த்து கரண்டியால் தொடர்ந்து இரண்டு நிமிடம் கிளறி பாத்திரத்தை இறக்கி விடவேண்டும்.
சுக்கை சிறிது வறுத்து பொடியாக்கி ,ஏலக்காயை பொடியாக்கி இறுதியில் சேர்க்க வேண்டும்.

செய்முறை 3:
சுலபமான + சிக்கனமான +ருசியான + நவீன சேமியா பருத்தி பால்

தேவையான பொருட்கள்:-

100 கிராம் - பருத்தி விதை (நயமானதாக பார்த்து வாங்கவும்)
50 கிராம் - வறுத்த சேமியா
1 / 2 மூடி - தேங்காய்
1 / 4 KG மண்டவெல்லம்
ஏலம், சுக்கு தேவைகேற்ப
உலர்திராட்சை,முந்திரி தேவைகேற்ப

செய்முறை:-

பருத்தி விதையை முதல் நாள் நன்றாக ஊற வைத்து, மறுநாள் நன்கு கழுவி விடவும். பின் பருத்தி விதையை ஆட்டி வடிகட்டி முதல் பால், இரண்டாம் பால் எடுத்து கொள்ளவும். அதில் முக்கால் லிட்டர் தண்ணீர் சேர்த்து அடுப்பை பற்ற வைத்து, ஒரு பாத்திரத்தில் இந்த பாலை ஊற்றி நன்கு கொதிக்க விடவும். அதன் பின் வறுத்த சேமியாவை நன்றாக உடைத்து அதனுடன் சேர்க்கவும். இந்த கலவையை நன்கு கிளறி கொண்டே இருக்க வேண்டும். பிறகு வெள்ளத்தில் தண்ணீர் சேர்த்து நன்கு வடுகட்டி அதனையும் இந்த கலவையுடன் சேர்க்கவும். அதில் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து அடுப்பை சிம்மில் வைக்கவும்.

ஒரு வாணலியில் சிறிது நெய் விட்டு காய்ந்ததும், அதில் உலர்திராட்சை, முந்திரி சேர்த்து லேசாக வறுத்து பின், அதனுடன் தேங்காய் சேர்த்து லேசாக வதக்கவும். இளம் பொன்னிறம் வரும் வரை வறுத்து பின் அதை பருத்தி பால் கலவையில் கொட்டி நன்கு கிளறவும். பின் ஏலம், சுக்கு தட்டி போட்டி ஒரு கொதி வரும் போது இறக்கினால் ருசியான சேமியா பருத்தி பால் தயார்.
நன்றி ஆரோக்கிய உணவுகள்

ஆற்றுநீரை எப்படி அளப்பது....


மேட்டுர் அணைக்கு 10 tmc தண்ணீர் கர்னாடக திறந்து விட்டது என்றெல்லாம் செய்திதாள்களில் படித்து இருப்பீர்கள் , அவர்கள் எப்படி 10 tmc சரியாக திறந்து விட்டார்கள் , அல்லது நாம் தான் 10 tmc சரியாக வந்ததா என்று அளந்து சரி பார்ப்பது எப்படி , ஆற்றில் வரும் தண்ணீரை எப்படி அளப்பார்கள் என்றெல்லாம் சந்தேகம் வந்து இருக்கும் உங்கள் அனைவருக்கும்.
ஆற்றில் வரும் நீரை அளப்பது எப்படி?, tmc என்றால் என்ன ?,
நீரை கன அளவுகளில் தான் சொல்வார்கள் லிட்டர் என்பதெல்லம் சிறிய அளவுக்கு அதிகம் எனில் கன அடிகளில் , நீர் வெளியேறும் வேகத்தை கியூசெக்(cusec= cubic feet per sec)), எத்தனை கன அடி நீர் ஒரு வினாடியில் வெளி ஏறுகிறது எனக்கணக்கிடுவார்கள்.tmc(thousand million qubic feet) என்றால் ஆயிரம் மில்லியன் கன அடி என்று பொருள்.ஒரு கன அடியில் 28.3 லிட்டர்இருக்கும்.
ஒரு நதி அல்லது கால்வாயில் ஓடும் நீரின் அளவை கணக்கிட சில முறைகள் உள்ளது.
சிறிய அளவில் அளப்பதற்கு நீர் கரன்ட் மீட்டர் பயண்படும் சாதாரணமாக வீட்டில் குடிநீர் இணைப்பில் இது போன்ற கருவி பொருத்தப்பட்டிருக்கும் ,
பெரிய அளவில் அளக்க ,
1)வெயர் முறை(weir method)
2)டாப்ளர் முறை பயன்படும்!
வேறு சில முறைகளும் உள்ளது, பெரிதும் பயன்படுவது இவையே!
வெயர் முறை என்பது வேறொன்றும் இல்லை, தண்ணீர் வெளியேறும் வாயிலின் கனப்பரிமானங்களை கணக்கிடுவதே.
உதாரணமாக கால்வாயின் குறுக்கே ஒரு சிறிய தடுப்பணையை கட்டி அதில் ஒரு மீட்டருக்கு ஒரு மீட்டர் அளவில் ஒரு திறப்பு மட்டும் இருக்கும் , எனவே ஒரு வினாடிய்ல் அந்த திறப்பின் மூலம் வெளியேறும் நீரின் அளவை கணக்கிட்டால் போதும் ஒரு மணி நேரத்தில் எத்தனை லிட்டர் நீர் வெளியேறியது என்பதை கணக்கிடலாம்.
கொஞ்சம் பெரிய கால்வாய்களில் இது போன்ற திறப்பை பெரிதாக வைத்து
உயரத்தை அளவிட்டு விடுவார்கள்
இத்தனை அடி உயரத்தில் நீர் போனால்
இவ்வளவு தண்ணீர் பாய்ந்துள்ளது எனக்கணக்கிடுவார்கள்.
காவிரி போன்ற பெரிய நதிகளில் இப்படி அணைக்கட்டாமல் , ஒரு குறிப்பிட்ட இடத்தை தேர்ந்து எடுத்து அங்கே நதியின் அகலம் , ஆழம் எல்லாம் கணக்கிட்டு உயரத்தை காட்ட ஒரு பெரிய கம்பத்தில் அளவிட்டு நட்டு விடுவார்கள் எத்தனை அடி உயரம் தண்ணீர் எவ்வளவு நேரம் அக்குறிப்பிட்ட இடத்தை கடந்து சென்றது எனக்கணக்கிட்டு மொத்த நீர் பாய்ந்த அளவை கண்டுபிடிப்பார்கள்.
இதிலும் நவீன முறை டாப்ளர் ராடார் பயன்படுத்துவது.
உயரமான இடத்தில் (அ) அணைக்கட்டின் மீதே டாப்ளர் ரேடார் எனப்படும் ஒலியை அனுப்பி மீண்டும் திரும்ப வாங்கும் கருவியை பொருத்தி விடுவார்கள். இந்த ரேடார் நீரோட்டத்தின் வேகத்தை கணக்கிட மட்டுமே, மற்றபடி நதியின் அகலம் ,ஆழம் கடக்கும் வேகம் இதனை கொண்டு நீரின் கன அளவை கண்டு பிடித்துகொள்வார்கள்.
நதியின் அடிமட்டத்தில் மேடு பள்ளங்கள் இருக்கும் அதன் விளைவாக நீரின் மேற்பறப்பில் வேகம் ஒரு இடத்தில் அதிகமாகவும் ஒரு இடத்தில் குறைவாகவும் காட்டும் , இதனை ரேடாரில் பதிவு செய்வது கடினமாக இருக்கும்.
எனவே நதியின் குறுக்கே குறைந்த மட்ட அணை ஒன்றைக்கட்டுவார்கள் இது எப்படி இருக்கும் எனில் நீர் மட்டத்தில் ஒரு சுவர் போல இருக்கும் அதன் மீது நீர் வழிந்தோடும் எனவே அக்குறிப்பிட்ட இடத்தில் நீரின் மேற்பறப்பு சமமாகவும் , ஒரே வேகத்திலும் இருக்கும். எதிரொலிக்க வசதியாக நீரில் சில எதிரொலிக்கும்
பொருட்களையும் மிதக்க விட்டு அனுப்புவார்கள் , டாப்ளர் ரேடார் அனுப்பும் ஒலியை அவை கன கச்சிதமாக எதிரொலித்து அனுப்பும் எனவே துல்லியமாக நீரோட்டதின் வேகத்தை கணக்கிடலாம், அதைக்கொண்டு மொத்தமாக பாயும் நீரின் கன அளவை சொல்வார்கள்.
பிள்ளிகுண்டு என்ற இடத்தில் கர்நாடக மேட்டூர்க்கு அனுப்பும் நீரை இப்படி அளந்து அனுப்பும் , அதனை நாம் மீண்டும் மேட்டுரில் அளந்து பார்ப்போம்.இரண்டு அளவிற்கும் 20 சதவித ஏற்ற தாழ்வு(அவர்கள் 10 tmc அனுப்பினால் இங்கே 8 tmc தான் காட்டுகிறதாம்) இருப்பதாக ஒரு தனி தாவா வேறு இருக்கிறது.
உபரி தகவல் மேட்டூர் அணை(length- 1700 m, height 120 ft) என்று சொன்னாலும் அதற்கு பெயர் ஸ்டான்லி நீர் தேக்கம் ஆகும் . மொத்த கொள்ளளவு 93.4tmc.
நன்றி.சிந்திங்க

அதிசய பானம்......!!

A + B + C .... ஒரு ஆப்பிள் ஒரு பீட்ரூட் ஒரு காரட் மூன்றையும்எடுத்து நன்கு கழுவி துடைத்து தோலுடன் நறுக்கி ஜூஸ் போல அரைத்து அருந்தவும்.......!
விரும்பினால் சிறிது எலுமிச்சை சாறு சேர்க்கலாம்......!
இந்த பானம் அருந்துவதால் பயன்கள்......!
புற்று நோய் வராமல் தடுக்க மற்றும் ஆரம்ப நிலையில் உள்ள புற்றுநோய் செல்களை அழிக்கவல்லது இந்த ஜூஸ்.......!
ஈரல் மற்றும் சிறுநீரக சம்பந்தமான நோய்களை தடுக்கிறது.......!
மாரடைப்பு மற்றும் உயர் இரத்த அழுத்தம் ஏற்படாமல் காக்கின்றது
நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குகின்றது......!
உடலில் சேரும் நச்சுக்களை வெளியேற்றுகின்றது.
இரத்தத்தை சுத்தபடுதுகின்றது.
பார்வை குறைபாடுகளை நீக்குகின்றது.......!
மலச்சிக்கல் பிரச்சினைகளுக்கு தீர்வு.......!
*உடல் இளைக்க விரும்புவோர் இதை அருந்தி வந்தால் நல்ல மாற்றம் ஏற்படும்.......!
^ கூடுமானவரை இயற்கை முறையில் விளைந்த காய்களையே பயன்படுத்துங்கள்.......!
அவ்வாறு கிடைக்காவிடில் நன்கு கழுவியபின்னரே அரைக்கவும்......!

நல்ல_நோட்டா_கள்ளநோட்டா???


இந்திய ரூபாய் நோட்டுக்கு ஒரு நீண்ட நெடிய வரலாறு உண்டு. 15–வது நூற்றாண்டில் பணப்புழக்கம் தொடங்கியபோது, வெள்ளி நாணயத்தில்தான் தொடங்கியது. 1935–ம் ஆண்டுதான் முதலில் ரிசர்வ் வங்கி இந்தியாவில் தொடங்கப்பட்டது. 1938–ம் ஆண்டு ரிசர்வ் வங்கி 6–வது ஜார்ஜ் மன்னரின் படத்தோடு முதலில் 5 ரூபாய் நோட்டுகளை அச்சடித்து வெளியிட்டது.
தொடர்ந்து அதே ஆண்டில் 10 ரூபாய், நூறு ரூபாய், ஆயிரம் ரூபாய், 10 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்தன. 1940–ம் ஆண்டுதான் ஒரு ரூபாய் நோட்டு வந்தது. இப்படி தொடங்கியதுதான் ரூபாய் நோட்டுகளின் சரித்திரம். தற்போது ரிசர்வ் வங்கி 5 ரூபாய், 10 ரூபாய், 20 ரூபாய், 50 ரூபாய், 100 ரூபாய், 500 ரூபாய், 1,000 ரூபாய் நோட்டுகளை தயாரித்து, மக்களிடையே புழக்கத்தில் வெளியிட்டு வருகிறது. ரிசர்வ் வங்கி அச்சிட்ட 11 லட்சத்து 64 ஆயிரத்து 800 கோடி ரூபாய், 73 ஆயிரத்து 517 மில்லியன் ரூபாய் நோட்டுகளாக உலா வந்துகொண்டிருக்கிறது.
இந்த பணத்தின் மதிப்பை வைத்துத்தான் பொருளாதார மதிப்பீடுகள் கணக்கிடப்படுகின்றன. ஆனால், இந்திய பொருளாதாரத்தை சீர்குலைக்க, சில அண்டை நாட்டு சக்திகள் குறிப்பாக, பாகிஸ்தான் கள்ள ரூபாய் நோட்டுகளை அச்சடித்து இந்தியாவுக்குள் சுற்ற வைக்கிறது. இதுபோல, நம் நாட்டுக்குள்ளும் சில தீயசக்திகள் கள்ள ரூபாய் நோட்டுகளை அச்சடித்து வினியோகத்துக்கு அனுப்புகின்றன.
இப்போதெல்லாம் கள்ள நோட்டுகளின் புழக்கம் அதிகமாக இருக்கிறது என்று மக்களிடையே ஒரு பயம் உருவாகிவிட்டது. 2013–2014–ம் ஆண்டு மட்டும் ரிசர்வ் வங்கியும் மற்றும் வணிக வங்கிகளும் 4 லட்சத்து 88 ஆயிரத்து 273 எண்ணிக்கையிலான கள்ள நோட்டுகளைக் கண்டுபிடித்துள்ளது. கடந்த ஆண்டு இதேபோல 4 லட்சத்து 98 ஆயிரத்து 252 எண்ணிக்கையில் கள்ள நோட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மொத்த கள்ள நோட்டுகளில் 52 சதவீதம் 500 ரூபாய் நோட்டுகள்தான். 24 சதவீதம் 100 ரூபாய் நோட்டுகள். 22.5 சதவீதம் ஆயிரம் ரூபாய் நோட்டுகளாகும்.
சில ஆண்டுகளுக்கு முன்பே நாட்டில் புழக்கத்தில் உள்ள கள்ள நோட்டுகளின் மதிப்பு ஒரு லட்சத்து 70 ஆயிரம் ரூபாயாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதில், பெரும்பாலான நோட்டுகள் 2005–ம் ஆண்டுக்கு முன்பு ரிசர்வ் வங்கியால் வெளியிடப்பட்ட தோற்றத்தைப்போல இருக்கிறது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
2005–ம் ஆண்டுக்கு முன்பு அச்சடிக்கப்பட்ட ரூபாய் நோட்டுகளின் மதிப்பு 3 லட்சத்து 40 ஆயிரம் கோடி ரூபாயாகும். 2005–ம் ஆண்டுக்குப்பிறகு அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டுகளில் பின்பக்கத்தில் கீழ் வரிசையின் மத்தியில் சிறிய அளவில் அந்த ரூபாய் நோட்டு அச்சடித்த ஆண்டு இடம்பெற்றிருக்கும். அதற்கு முன்பு அச்சிடப்பட்ட நோட்டுகளில் அப்படி ஆண்டு இடம்பெற்றிருக்காது.
கடந்த ஜனவரி மாதம் ரிசர்வ் வங்கி ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி, ஏப்ரல் 1–ந் தேதி முதல் 2005–ம் ஆண்டுக்கு முந்தைய நோட்டுகளை அனைத்து வங்கிகளும் திரும்பப்பெற்று அதற்கு பதிலாக, புதிய ரூபாய் நோட்டுக்களை வழங்கிக்கொண்டிருக்கிறது. ஆனால், இதுவரை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. வங்கிகள் இப்போது விநியோகம் செய்யும் ரூபாய்களிலும் இத்தகைய நோட்டுகள் இருக்கின்றன.
முதலில் வங்கிகள் இந்த நோட்டுகளை வழங்கக்கூடாது. மேலும், ஏராளமான நோட்டுகளில் இப்படி ஆண்டு மட்டும் அச்சடிக்கப்படாமல் வேறு சில வித்தியாசங்களும் இருக்கிறது. அவையெல்லாம் கள்ளநோட்டுகள் என்று தெரியாமல் இதை வாங்கிய அப்பாவிகளும், வியாபாரிகளும் என்ன செய்வது? என்று திணறுகிறார்கள். ஏராளமான கள்ள நோட்டுகள் புழக்கத்தில் இருக்கும் நிலையில், இந்த சுமையை யார் தாங்குவது? ஒருவர் கைக்கு வந்துவிட்டாலேயே, அவரை எப்படி பொறுப்பாக்குவது?. எனவே, கள்ளநோட்டுகளை அறவே ஒழிக்க, ஒரு புதிய அறிவிப்பை ரிசர்வ் வங்கி வெளியிட்டு உடனடியாக நடைமுறைக்கு கொண்டு வரவேண்டும்.
நன்றி: தினத்தந்தி

இந்த உணவுகளில் எல்லாம் கொலஸ்ட்ரால் இல்லை என்பது உங்களுக்குத் தெரியுமா?

தற்போது ஏராளமான மக்கள் கொலஸ்ட்ரால் பிரச்சனையால் கஷ்டப்படுகின்றனர். இதற்கு ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையும், உணவுப் பழக்கவழக்கங்களும் தான் முக்கிய காரணம். ஒருவருக்கு கொலஸ்ட்ரால் பிரச்சனை இருந்து, மேன்மேலும் கொலஸ்ட்ரால் நிறைந்த உணவுப் பொருட்களை உட்கொண்டால், அதனால் உடல் பருமன், இரத்த அழுத்த பிரச்சனை முதல் இதய நோய்கள் வரை பலவற்றை விரைவில் பெறக்கூடும்.
எனவே கொலஸ்ட்ரால் பிரச்சனை இருப்பவர்கள் உண்ணும் உணவுகளில் மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். சரி, உணவுகளில் கொலஸ்ட்ராலே இல்லை என்பது தெரியாதா? அப்படியெனில் இக்கட்டுரை உங்களுக்கு உபயோகமாக இருக்கும்.
ஏனெனில் இங்கு 0% கொலஸ்ட்ராலைக் கொண்ட உணவுப் பொருட்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. அதைப் படித்து அவற்றை உட்கொண்டு, நன்மைப் பெறுங்கள்.
ஆம், உண்மையிலேயே உருளைக்கிழங்கில் கொலஸ்ட்ரால் சிறிதும் இல்லை. அதிலும் இதனை எண்ணெயில் பொரித்து உட்கொள்வதைத் தவிர்த்து, வேக வைத்து உண்ணும் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
தக்காளியில் உள்ள அதிகப்படியான ஆன்டி-ஆக்ஸிடன்ட்டான லைகோபைன், உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவும். ஆகவே கொலஸ்ட்ரால் பிரச்சனை இருப்பவர்கள் சாலட்டுகள், சாண்விட்ச்களில் தக்காளியை சேர்த்துக் கொள்ளுங்கள். மேலும் தினமும் ஒரு டம்ளர் தக்காளி ஜூஸைக் குடிக்கலாம்.
பசலைக்கீரையில் இதய ஆரோக்கியத்திற்கு தேவையான ஊட்டச்சத்துக்களான பைட்டோ ஸ்டெரால்கள் மற்றும் நார்ச்சத்து உள்ளது. மேலும் இதில் கொலஸ்ட்ரால் இல்லை என்பதால், கொலஸ்ட்ரால் பிரச்சனை இருப்பவர்களுக்கு இது ஓர் அற்புதமான உணவுப் பொருள்.
இவைகளிலும் கொலஸ்ட்ரால் இல்லை ஆனால் நார்ச்சத்து வளமான அளவில் உள்ளது. எனவே பீன்ஸ், பட்டாணி மற்றும் பருப்பு வகைகளை தவறாமல் உணவில் சேர்த்து, அதன் முழு சத்துக்களையும் பெறுங்கள்.
பலரும் வெண்ணெய் பழம் என்ற பெயரினால், இதில் கொலஸ்ட்ரால் அதிகம் இருக்கும் என்று தவறாக நினைக்கின்றனர். ஆனால் இப்பழத்தில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் தான் அதிகம் உள்ளது. மேலும் பல்வேறு ஆய்வுகளிலும், இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உடலில் இருக்கும் கெட்ட கொலஸ்ட்ராலின் அளவைக் குறைப்பதாக கண்டுபிடித்துள்ளனர்.
சோயா பீன்ஸில் சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் குறைவாகவும், நார்ச்சத்துக்கள் அதிகமாகவும் உள்ளது. ஆனால் இதில் கொலஸ்ட்ரால் இல்லை. மேலும் இதனை உணவில் சேர்த்தால், உடலில் புரோட்டீன் அளவு உயர்வதோடு, கெட்ட கொலஸ்ட்ராலின் அளவு 8-10 சதவீதம் குறையும்.
ஓட்ஸில் கரையக்கூடிய நார்ச்சத்து அதிகம் இருப்பதோடு, கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளவர்களுக்கு இது ஓர் அற்புதமான உணவுப் பொருள். ஆகவே காலையில் இதனை உணவாக உட்கொள்வது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
பூண்டு உடலில் இருக்கும் கெட்ட கொலஸ்ட்ராலின் அளவை குறைப்பதோடு, இதய நோய் தாக்கும் அபாயத்தில் இருந்தும் குறைக்கும்.
ஆளி விதையில் கெட்ட கொலஸ்ட்ராலின் அளவைக் குறைக்கும் ஆல்பா லினோலியின் அமிலம் அதிகம் உள்ளது. ஆகவே கொலஸ்ட்ரால் பிரச்சனை இருப்பவர்கள், ஆளி விதையை தினமும் 1-2 டேபிள் ஸ்பூன் உட்கொள்வது உடலுக்கு நல்ல பாதுகாப்பை வழங்கும்.
பழங்களிலும் கொலஸ்ட்ரால் குறைவாகத் தான் இருக்கும். அதிலும் வாழைப்பழம், தர்பூசணி, எலுமிச்சை, நெல்லிக்காய், ஆப்பிள், பீச், ப்ளம்ஸ் போன்றவற்றை ஒருவர் தினமும் உட்கொண்டு வந்தால், உடலில் நார்ச்சத்தின் அளவு அதிகரித்து, கொலஸ்ட்ராலின் அளவு குறையும்.

சோப்பு யாரால் எப்போது உருவாக்கப்பட்டது ஒரு சுவாரசிய வரலாறு


மெசபடோமியப் பிரதேசத்தின் புகழ் பெற்ற பேரரசுகளில் ஒன்றான பாபிலோனிய பேரரசின் (தற்போதைய ஈராக்கின் அல்ஹில்லாஹ் மற்றும் பாபில் புரோவின்ஸ்; Al Hillah & Babil Province) கடைசி அரசரான நபோனிதஸ் (கி.மு.556 – கி.மு.539) ஆட்சிக்காலத்தில் அரண்மனையில் பணிப்பெண்களாக வேலை பார்த்து வந்த பெண்கள், எரிந்த மரங்களின் சாம்பலை பயன்படுத்தி சலவைக்கற்களின் (Marble) மீது படிந்திருந்த கறைகளை சுத்தம் செய்தனர்.
இதனை ஒரு நாள் தற்செயலாக பார்வையிட்ட நபோனிதஸ் இது குறித்து தன்னுடைய அரண்மனை ரசவாதிகளிடம் (வேதியியலாளர்கள்) விவாதம் செய்தார். இந்த நிகழ்வுதான் சோப்பு தயாரிப்பிற்கு வித்திட்டது என்று சொல்லலாம்.
இது குறித்து ஆராய்ந்த அன்றைய பாபிலோனிய வேதியியலாளர்கள், கறைகளை அகற்றி சுத்தம் செய்வதற்க்காக ஒரு பொருளை உருவாக்கிட வேண்டும் என்று ஆவல் கொண்டனர். அந்த பொருள் தண்ணீரில் கரையக் கூடியதாக இருக்க வேண்டும் அதே நேரம் இலகுவாக கரைந்துவிடாமலும் இருக்க வேண்டும், மிக முக்கியமாக அது கறைகளையும் அகற்றவேண்டும் என்பது அவர்களின் முன்னின்ற சவாலாக இருந்தது.
அதனை தொடர்ந்து, சாம்பலுடன், விலங்குகளின் கொழுப்புகளில் இருந்து பெறப்பட்ட கொழுப்பு எண்ணெய், மெழுகு, மற்றும் உப்பு இவற்றுடன் தண்ணீரையும் சேர்த்து ஒரு காரகரைசல் தயாரிக்கப்பட்டது. தயாரிக்கப்பட்ட இந்தக் காரகரைசலை(alkali) சூடுபடுத்தி கொதிக்க வைத்து வற்றச் செய்தனர்.Soap-Making
காரகரைசல் வற்றி தின்ம நிலையை அடைந்ததும் அவை சிறுசிறு துண்டுகளாக வெட்டப்பட்டது. இதுதான் மனிதன் முதலில் தயாரித்த சவர்க்காரம் (soap) ஆகும். தயாரித்த சோப்புகள் முதலில் தரையை சுத்தம் செய்யவும் பின்பு ஆடைகளை சுத்தம் செய்யவும் இறுதியாக குளிக்கவும் பயன்படுத்தினார்கள். பின்னர் இத்தொழில்நுட்பம் சில வணிகர்களின் வாயிலாக சிரியா, ரோம், எகிப்த்து மற்றும் மொரோக்கோ வரை சென்றடைந்தது.
சரி சோப்பு தயாரித்தாகிவிட்டது, இனி இந்த சோப்பிற்கு, சோப்பு என்று எப்படி பெயர் வந்ததது என்று பார்ப்போமா? Soap என்ற சொல் Sapo என்ற லத்தின் சொல்லில் இருந்து பிறந்ததாகும். கி.மு.ஏழாம் நூற்றாண்டில் ரோமாபுரி பேரரசின் தலைநகரான ரோமில் (தற்போது Rome, Italy) Sapo என்றொரு மலை இருந்ததாம். அந்த மலை எதிர்பாராத விதமாக ஒரு நாள் தீப்பற்றிகொள்ள அந்த மலையில் வசித்த விலங்குகள் உட்பட மரங்கள் அனைத்தும் தீயில் எரிந்து நாசமாயின.
அக்காலகட்டங்களில் சோப்பு தயாரிக்க விலங்குகளின் உடலிலிருந்து எடுக்கப்படும் கொழுப்பு ஒரு முக்கிய மூலப்பொருளாக இருந்த காரணத்தினால், முற்றிலும் எரியாமல் கருகிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட விலங்குகளின் உடலிலிருந்து கொழுப்பை நீக்கிய பின்பே அவற்றின் உடல் தகனம் செய்யப்பட்டது.
இறந்து போன அந்த விலங்குகளின் நினைவாக அந்த மலையின் பெயரை சோப்புக்கு Sapo என்று பெயரிட்டதாக சில வரலாற்று தகவல்கள் தெரிவிக்கின்றன. கி.பி.78-ஆம் ஆண்டளவில் புகழ் பெற்று விளங்கிய ரோமானிய எழுத்தாளரான பிளினி தி எல்டர் (Pliny the Elder) ‘இயற்கையின் வரலாறு’ (Historia Naturalis) என்ற தனது நூலில் சோப்பை பற்றி குறிப்பிடுகையில் Sapo என்று குறிப்பிடுவதற்கு பதிலாக, தவறுதலாக Soap என்று குறிப்பிட்டுவிட்டார், உச்சரிப்பதற்கு sapo என்பதை விட Soap என்பது மிக எளிதாக இருந்ததால் அன்று முதல் இன்றுவரை அந்த பெயரே நிலைத்துவிட்டது.
கிட்டத்தட்ட பதிமூன்றாம் நூற்றாண்டு வரை ஐரோப்பிய யூனியனிலுள்ள பெரும்பாலான நாடுகள் சோப்புகளை இறக்குமதி செய்ததே தவிர தயாரிக்கும் முயற்ச்சியில் எந்த நாடுகளும் ஈடுபடவில்லை என்று தான் கூற வேண்டும், பதினைந்தாம் நூற்றாண்டின் பிற்பாதியில் தான் ஐரோப்பிய யூனியனின் தேவைக்கென்று பிரான்ஸிலுள்ள டௌலோன் மற்றும் மார்ஸிய்லீ (Toulon, Marseille) ஆகிய நகங்களில் சோப்பு தயாரிக்கும் பணி துவங்கியது.
Homemade-Soaps-from-Melt-Pour-Soap-Bases2
பதினாறாம் நூற்றாண்டு வரை மனிதர்கள், துணிகளை துவைப்பதற்க்கும் குளிப்பதற்கும் ஒரே சோப்புகளைத்தான் பயன்படுத்தினார்கள். பிரான்ஸில் சோப்பு தயாரிக்கப்பட்ட சில காலங்களிலேயே அதாவது பதினாறாம் நூற்றாண்டில் துவக்கத்திலேயே மனிதர்கள் குளிப்பதற்க்காக தனியாக மென்மையான சோப்புகள் தயாரிக்கும் பணி துவங்கியது.
இதில் விலங்குகளின் கொழுப்புக்கு பதிலாக ஆலிவ் ஆயில், தேங்காய் எண்ணெய், மற்றும் சின்னம் எண்ணெய் ஆகியவை பயன்படுத்தப்பட்டன. கி.பி.1788-ஆம் ஆண்டு வரை சோப்பு தயாரித்தல் என்பது ஒரு கடுமையான தொழிநுட்பமாகவும், அது ஒரு குடிசை தொழிலாகவும் தான் இருந்துவந்தது.
இந்நிலையில் 1789-ஆம் ஆண்டு இங்கிலாந்தை சேர்ந்த ஆண்ட்ரூவ் பியர்ஸ் (Andrew Pears) என்பவர் முதன் முதலில் மிக எளிமையான தொழில்நுட்பத்தில் நறுமனத்துடன் கூடிய மென்சோப்புகளை தயாரிக்கும் தொழில்நுட்பம் ஒன்றைக் கண்டறிந்தார்.
இந்த தொழில்நுட்பத்தினை பயன்படுத்தி இவரது மருமகனான தாமஸ் ஜே. பார்ட் (Thomas J. Barratt) என்பவர் லண்டன் மாநகரில் உள்ள Isleworth என்ற இடத்தில் 1862-ஆம் அண்டு சோப்பு தயாரிக்கும் கம்பெனி ஒன்றை துவக்கினார். தயாரிக்கப்பட்ட சோப்பிற்க்கும் அந்த சோப்பு கம்பெனிக்கும் தனது மாமனாரின் நினைவாக பியர்ஸ் என்று பெயரிட்டார்.
இதுதான் உலகில் முதன் முதலில் வணிக நோக்கில் துவங்கப்பட்ட முதல் சோப்பு கம்பெனியாகும்.
தரமான சோப்பாக இருந்த காரணத்தினால் பியர்ஸ் சோப்பின் விலையும் சற்று அதிகமாகத்தான் இருந்தது இந்த காரணங்களால் சோப்புகளை அப்போது மேல்தட்டு மக்கள் மட்டுமே பயன்படுத்தினார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.
எல்லோரும் பயன்படுத்தும் வண்ணம் தரமான சோப்புகளை குறைந்த விலையில் தயாரிக்கும் தொழில்நுட்பத்தினை வில்லியம் கோசேஸ் (William Gossage) என்பவர் கண்டறிந்து அறிமுகப்படுத்தினார். இதன்பிறகு தான் சோப்புகளை ஐரோப்பிய யூனியன் மற்றும் அமெரிக்க நாடுகளில் உள்ள அனைத்து தரப்பு மக்களும் பயன்படுத்த ஆரம்பித்தனர்.
உலகில் அனைத்தும் நாடுகளிலும் உள்ள மக்களை சோப்பு சென்றடைய காரணமாக இருந்தவர்கள் வில்லியம் லீவர் மற்றும் ஜேம்ஸ் லீவர் என்ற இரு சகோதரர்கள் என்று சொன்னால் மிகையில்லை. ஒரு பொருளை தயாரிப்பது மட்டும் முக்கியமல்ல அதனை சந்தைப்படுத்தும் வித்தை அறிந்தவனால் மட்டுமே அப்பொருளை உலககெங்கும் வாழும் அனைத்து நாட்டுமக்களிடமும் கொண்டு போய் சேர்த்திட முடியும் என்ற உண்மையை இவர்கள் தான் உலகிற்கு தெரியச்செய்தவர்கள் ஆவர்.
இவர்கள் இருவரும் இணைந்து 1886-ல் லீவர் பிரதர்ஸ் (Lever Brothers) என்ற பெயரில், பொருட்களை சந்தைப்படுத்தும் கம்பெனி ஒன்றை துவங்கினார்கள். இவர்களில் திறமையால் தான் சோப்பு உலகிலுள்ள அனைத்து நாடுகளிலும் மிகக்குறுகிய காலத்தில் பட்டி தொட்டி எங்கும் சந்தைப்படுத்தப்பட்டது.
லீவர் பிரதர்ஸ் என்ற கம்பெனி பின்னாளில் யுனிலீவர்ஸ் (Unilever) என்று பெயர் மாற்றம் அடைந்து மிகப்பெரும் நிறுவனமாக வளர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.